×

குன்னூர் அருகே, சோலடாமட்டம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை

*சுற்றுலாத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்

ஊட்டி : குன்னூர் அருகே உள்ள சோலடாமட்டம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடையை சுற்றுலாத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.தமிழ்நாடு அரசு சார்பாக பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் மலைவாழ் மக்கள் அதிகம் வாழும் பகுதியாக உள்ளாதல் இங்கு தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

குன்னூர் அருகேயுள்ள வண்டிச்சோலை ஊராட்சிக்குட்பட்ட சோலடாமட்டம் பகுதியில் சுமார் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் ரேசன் கடையில் பொருட்கள் வாங்குவதற்கு சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கோடமலை பகுதியில் உள்ள ரேசன் கடையில் பொருட்களை வாங்க வேண்டியுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் தங்களது கிராமத்திற்கு நியாயவிலை கடை வேண்டும் என கடந்த 35 ஆண்டுகளாக அதிகாரிகளிடம் கேட்டு வந்தனர். இந்நிலையில், முதற்கட்டமாக அப்பகுதியில் 175 அட்டதாரர்களுக்காக பகுதி நேர நியாயவிலைக் கடையை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் திறந்து வைத்து, அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்தார்.

தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது, ‘‘தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள். ரேசன் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் தரமான பொருட்களை வழங்கவும் 200 குடும்ப அட்டைதார்கள் ஒரு பகுதியில் இருந்தாலே அவர்களுக்கென நடமாடும் நியாய விலைக் கடை, பகுதி நேர நியாய விலை கடைகளை அமைக்க அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து, நமது மாவட்டத்தில் ஊட்டியில் 6 ரேசன் கடைகளும், கூடலூரில் 2 கடைகளும், குன்னூரில் 7 கடைகளும் என மொத்தம் 15 பகுதி நேரக்கடைகள் திறந்து வைக்கப்படவுள்ளது. ஏற்கனவே, கோடமலை நியாய விலைக்கடைகள் 579 குடும்ப அட்டைதார்கள் உள்ளனர்.

சோலாடாமட்டம் பகுதியிலுள்ள பொதுமக்கள் சுமார் 8 கி.மீ. தொலைவிலுள்ள கோடமலை பகுதிக்கு சென்று அத்தியாவசிய பொருட்கள் பெற்று வருவதற்கு சிரமப்பட்டு வந்த நிலையில், அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் விதமாக சோலாடாமட்டம் பகுதியில் புதிய பகுதி நேர நியாய விலைக்கடை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதன், மூலம் ஏறக்குறைய 175 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் கௌசிக், குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுனிதா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மீனா, பிரேம்குமார், காளிதாஸ், கருணாநிதி, ஊராட்சி தலைவர் மஞ்சுளா, ஜெயக்குமார், மணிகண்டன், ஆனந்தராஜ், சிவஞானம், ராஜேந்திரன், சிலம்பரசன் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post குன்னூர் அருகே, சோலடாமட்டம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை appeared first on Dinakaran.

Tags : Soladamattam village ,Coonoor ,Tourism Minister ,Ooty ,Tamil Nadu government ,Nilgiris ,
× RELATED தேயிலை விவசாயிகள் மீது முதல்வர் தனி கவனம் செலுத்தி வருகிறார்