×

திருமணத்திற்கு வற்புறுத்தியதால் ஆத்திரம்; சென்னை கர்ப்பிணியை அடித்துக்கொன்ற பூசாரி: பாதாள சாக்கடையில் சடலம் வீச்சு

திருமலை: ஐதராபாத் அருகே திருமணத்திற்கு வற்புறுத்தியதால் சென்னையை சேர்ந்த கர்ப்பிணியை, பூசாரி கல்லால் அடித்து கொலை செய்து சடலத்தை பாதாள சாக்கடையில் வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத் புறநகர் பகுதியான ஷம்ஷாபாத்தை சேர்ந்தவர் வெங்கடசாய் சூர்ய கிருஷ்ணா. அதே பகுதியில் உள்ள ஒரு கோயிலில் பூசாரியாக உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். சென்னையை சேர்ந்தவர் அப்சரா. கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக ஷம்ஷாபாத்தில் வசித்து வந்தார். இவர் கோயிலுக்கு சென்று வரும் போது பூசாரி வெங்கட சாய் சூர்ய கிருஷ்ணாவுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் தகாத உறவாக மாறியது.

தொடர்ந்து இருவரும் தனிமையில் இருந்த வந்தனர். அதனால் அப்சரா கர்ப்பமானதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, கருவை கலைக்க வெங்கட சாய் சூர்ய கிருஷ்ணா அப்சராவை வற்புறுத்தி கருவை கலைக்க செய்துள்ளார். பின்னர், இருவரும் மீண்டும் தனிமையில் இருந்துள்ளனர். அதனால், அப்சரா மீண்டும் கர்ப்பமாகியதால் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி பூசாரி வெங்கட சாய் சூர்ய கிருஷ்ணாவிற்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். இதனால் அப்சராவை கொலை செய்ய முடிவு செய்த அவர், அதற்காக அப்சராவை 3ம் தேதி கோயம்புத்தூர் செல்வதாக கூறி சரூர் நகருக்கு வரும்படி கூறினார். இதைநம்பிய அப்சரா சரூர் நகருக்கு வந்தார்.

அங்கிருந்து அப்சராவை, வெங்கட சாய் சூர்ய கிருஷ்ணா காரில் ஷம்ஷாபாத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் திருமணம் தொடர்பாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வெங்கட சாய் சூர்ய கிருஷ்ணா அப்சராவின் தலை மீது கல்லால் தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த அப்சரா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, அப்சாராவின் சடலத்தை காரில் ஏற்றிக்கொண்டு 1 நாள் முழுவதும் சடலத்துடன் நகரில் வலம் வந்துள்ளார். பின்னர், சடலத்தில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியதால் சரூர் நகருக்கு கொண்டு வந்து அங்குள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பாதாள சாக்கடையில் வீசி சென்றுள்ளார்.

பின்னர், எதுவும் தெரியாதது போல் அப்சராவின் பெற்றோர் மூலம் ஷம்ஷாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் அப்சரா தனது தோழிகளுடன் பத்ராச்சலம் செல்வதாக கூறியதாகவும், அதன் பிறகு காணாமல் போனதாக கூறினார். ஆனால் போலீசாரின் விசாரணையில் வெங்கட சாய் சூர்ய கிருஷ்ணாவும், அப்சராவும் காரில் சரூர் நகரில் இருந்து ஷம்ஷாபாத் நோக்கி சென்றது அங்குள்ள சிசிடிவி காமிராவில் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், வெங்கட சாய் சூர்ய கிருஷ்ணாவை பிடித்து விசாரித்தனர். அதில், அப்சராவை கொலை செய்து சடலத்தை சாக்கடையில் வீசிச்சென்றதை அவர் ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து, நேற்று போலீசார் அப்சராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெங்கட சாய் சூர்ய கிருஷ்ணாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post திருமணத்திற்கு வற்புறுத்தியதால் ஆத்திரம்; சென்னை கர்ப்பிணியை அடித்துக்கொன்ற பூசாரி: பாதாள சாக்கடையில் சடலம் வீச்சு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tirumalai ,Hyderabad ,
× RELATED கோடை விடுமுறையை ஒட்டி பயணிகள்...