செங்கல்பட்டு: இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஆண்டுதோறும் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அக்டோபர் 21ம் தேதி நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி அலுவலகம் அருகே உள்ள மைதானத்தில் காவலர் நினைவு சின்னம் பகுதியில், பணியின்போது உயிரிழந்த 188 காவலர்கள் மற்றும் துணை ராணுவப் படையினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர் சாய் பிரணீத் பங்கேற்று, காவலர்களின் நினைவை போற்றும் வகையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாவட்ட டிஎஸ்பி பாரத், குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் முருகேசன், அமலாக்கதுறை துணை கண்காணிப்பாளர் வேல்முருகன், ஆயுதபடை ஆய்வாளர்கள் பிரகாசம், அண்ணாதுரை, உதவி ஆய்வாளர்கள் அஜித்குமார், முரளி உள்பட ஏராளமான காவலர்கள் மலர் வளையம் வைத்து மவுன அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் பணியின்போது உயிரிழந்த 188 காவலர்கள் மற்றும் துணை ராணுவப் படையினரின் மறைவுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. முடிவில், காவலர்களின் நினைவு சின்னம் அருகே வீர வணக்க நாளில் பங்கேற்ற அனைவரும் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, காவலர் வீர வணக்க நாளில் சிறப்பாக வாசித்த பேண்டு வாத்திய குழுவினரை பாராட்டி ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் அலெக்சாண்டருக்கு மாவட்ட எஸ்பி உத்தரவிட்டார்.
The post செங்கல்பட்டில் காவலர் வீர வணக்க நாள்: பணியில் உயிரிழந்த 188 காவலர்களுக்கு மரியாதை appeared first on Dinakaran.