×

பயிர் சாகுபடிக்கு தேவையான ரசாயன உரங்கள் 4.5 லட்சம் டன் இருப்பு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை: ‘முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் பயிர் சாகுபடிக்குத் தேவையான ரசாயன உரங்கள் 4,55,568 டன் இருப்பு உள்ளது’ என்று வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடிக்கும் அதிகமாக உள்ளதால், நடப்பாண்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிப்பரப்பு சென்ற ஆண்டினைப் போலவே அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தமிழ்நாட்டில் நடப்புக்கோடைப்பருவம், குறுவை நெல் சாகுபடி மற்றும் இதர வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்குத் தேவையான ரசாயன உரத் தேவையினை முன்னரே கணக்கிட்டு, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருப்பு வைக்க வேளாண்மைத்துறை உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏப்ரல் முதல் செப்டம்பர் முடிய உள்ள காரிப் பருவத்திற்கு, 4,23,000 டன் யூரியா, 1,45,000 டன் டிஏபி, 1,20,000 டன் பொட்டாஷ், 3,00,000 டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 50,000 டன் சூப்பர் பாஸ்பேட் ஆக மொத்தம் 10,38,000 டன் உரங்கள் தேவைப்படுகிறது.தமிழ்நாட்டில், மே 12ம் தேதி நிலவரப்படி, 1,66,311 டன் யூரியா, 71,580 டன் டிஏபி, 12,528 டன் பொட்டாஷ், 1,86,011 டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 19,138 டன் சூப்பர் பாஸ்பேட் ஆக மொத்தம் 4,55,568 டன் உரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலும், தனியார் உர விற்பனை மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. யூரியா தேவையில் 39 சதவீதமும், டிஏபி தேவையில் 50 சதவீதமும்,
காம்ப்ளக்ஸ் தேவையில் 60 சதவீதமும், சூப்பர் பாஸ்பேட் தேவையில் 38 சதவீதமும் இருப்பு உள்ளது. பொட்டாஷ் உரத்தைப் பொறுத்தவரை, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டிற்கு தேவையான பொட்டாஷ் உரம் நியூ மங்களூர் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாது, மே மாதம் 3ம் வாரத்திற்குள் 43,000 டன் இறக்குமதி பொட்டாஷ் உரத்தை தூத்துக்குடி துறைமுகத்தின் மூலம் கொண்டு வரவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சீரான உர விநியோகத்தை உறுதி செய்ய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்:
1. உரப் பைகள் மீதும் உரங்களின் அதிகபட்ச சில்லறை விலை அச்சிடப்பட்டுள்ளதால், விவசாயிகள் உரிய தொகையை செலுத்தி, விற்பனை முனையக் கருவியில் பட்டியலிட்டு வாங்கிக் கொள்ளலாம்.
2. கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தல், உர விற்பனையின் போது விவசாயிகளுக்குத் தேவைப்படாத இணைபொருட்களையும் வாங்குவதற்குக் கட்டாயப்படுத்தல், விற்பனைப்பட்டியல் இல்லாது உர விற்பனை செய்தல், உரம் பதுக்கல், உரம் கடத்தல் போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் அது குறித்து சென்னை, வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தில் செயல்படும் உர உதவி மையத்திற்கு 93634 40360 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, தங்கள் புகாரை வாய்மொழியாகவோ அல்லது வாட்ஸ் அப் குறுஞ்செய்தி மூலமாகவோ அரசுக்குத் தெரிவிக்கலாம். விவசாயிகளின் புகார்கள் மீது, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
3. சீரான உர விற்பனையை உறுதி செய்வதற்காக சிறப்புப் பறக்கும் படையும் அமைக்கப்பட்டு, விதிமுறையினை மீறி செயல்படும் உரநிறுவனங்களை கண்காணிப்பதற்கும் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பயிர் சாகுபடிக்கு தேவையான ரசாயன உரங்கள் 4.5 லட்சம் டன் இருப்பு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Minister ,MRK Panneerselvam ,Chennai ,Dinakaran ,
× RELATED அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம்...