×

சாதி மற்றும் மத அடிப்படையில் அரசியல்வாதிகள் தேர்தலை சந்திக்கும் நடைமுறையில் மாற்றம் வரும்: ஐகோர்ட் நம்பிக்கை

சென்னை: சாதி மத அடிப்படையில் அரசியல்வாதிகள் தேர்தலை சந்திக்கும் நடைமுறையில் மாற்றம் வரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சாதி, மதம் மற்றும் மொழி ரீதியாக வாக்குகளை சேகரிப்பது ஊழல் நடவடிக்கை என்று கடந்த 2017 ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. தேர்தல் நேரங்களிலும், தேர்தல் அல்லாத காலங்களிலும் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் லாபத்துக்காக சாதி, மதம், மொழி ரீதியாக வாக்காளர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவதாக கூறி வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியைச் சேர்ந்த ராஜேஷ் அனுார் மகிமைதாஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதைக் கண்காணிக்க, ஓய்வு பெற்ற நீதிபதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய சுதந்திரமான ஆணையத்தை அமைக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில், தேர்தல் பிரசாரம், சாதி மத அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை என்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவை பதிவு செய்து கொண்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், இந்தியா போன்ற பெரிய நாட்டில் மாற்றத்தை ஒரே இரவில் கொண்டு வரமுடியாது. ஜனநாயகத்தில் இந்தியா அடியெடுத்துவைத்து 75 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் குழந்தை பருவத்தில் தான் இந்தியா இருக்கிறது. இந்த மாற்றங்கள் ஏற்பட இன்னும் சில காலம் ஆகும். குடிமக்களும், அரசியல்வாதிகளும் சாதி மத அடிப்படையில் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

The post சாதி மற்றும் மத அடிப்படையில் அரசியல்வாதிகள் தேர்தலை சந்திக்கும் நடைமுறையில் மாற்றம் வரும்: ஐகோர்ட் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : High Court ,Chennai ,Madras High Court ,Supreme Court ,Dinakaran ,
× RELATED பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மரியாதை!