ஐதராபாத்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி 14 ரன் வித்தியாசத்தில் வென்றது. ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் முதலில் பந்துவீசியது. மும்பை தொடக்க வீரர்களாக ரோகித், இஷான் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 41 ரன் சேர்த்தது. கோஹ்லி, தவான், வார்னரைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் 6,000 ரன் சாதனை மைல் கல்லை எட்டிய 4வது வீரர் என்ற பெருமை ரோகித்துக்கு கிடைத்தது. ரோகித் 28 ரன் (18 பந்து, 6 பவுண்டரி) விளாசி ஆட்டமிழந்தார்.
அடுத்து இஷானுடன் இணைந்த கேமரூன் கிரீன் அதிரடியை தொடர, மும்பை ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. ஜான்சென் வீசிய 12வது ஓவரில் இஷான் (38 ரன், 31 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), சூரியகுமார் (7 ரன்) இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மும்பை 11.5 ஓவரில் 95 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து சரிவை சந்தித்தது. இந்த நிலையில், கிரீன் – திலக் வர்மா ஜோடி அதிரடியாக விளையாடி ரன் குவித்தது. இருவரும் 4வது விக்கெட்டுக்கு 56 ரன் சேர்த்தனர். அமர்க்களமாக விளையாடிய திலக் 37 ரன் (17 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன் குவித்தது. கிரீன் 64 ரன்னுடன் (40 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்துவீச்சில் மார்கோ ஜான்சென் 2, புவனேஷ்வர், நடராஜன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 193 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 19.5 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 178 ரன் எடுத்து 14 ரன் வித்தியாசத்தில் தோற்றது. மயாங் அகர்வால் 48 ரன் (41 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து அவுட் ஆனார். இதற்கு அடுத்து கிளாஸன் 32 ரன்(4 பவுண்டரி, 2 சிக்சர்) அடித்து அவுட் ஆனார். கடைசியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் 19.5 ஓவரில் 178 ரன் எடுத்து ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றது. மும்பை பந்துவீச்சில் பெஹரன்டார்ப், மெரிடித், சாவ்லா ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். இறுதியில் ஐதராபாத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 14 ரன் வித்தியாசத்தில் தோற்றது. மும்பை 2 புள்ளிகள் பெற்றது.
The post கேமரூன் கிரீன் அதிரடி அரை சதம் மும்பை இந்தியன்ஸ் வெற்றி appeared first on Dinakaran.