×

ஆர்.எஸ்.மங்கலம் அருகே தண்ணீரின்றி முழுவதும் வறண்ட பெரிய ஊரணி: குடிநீருக்காக மக்கள் கடும் அவதி

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே பழங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள குடிதண்ணீர் குளமான பெரிய ஊரணி தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருப்பாலைக்குடி ஊராட்சி மிகவும் பெரிய ஊராட்சி ஆகும். இந்த ஊராட்சியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி கடற்கரை அருகாமையில் அமைந்துள்ளதால், இங்கு கிணறு, ஆழ்துளை கிணறு உள்ளிட்டவை தோண்டப்பட்டால் நல்ல தண்ணீர் கிடைப்பதில்லை. இதன்படி வரும் உப்பு தண்ணீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை பல ஆண்டுகளாக தொடர்கிறது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர், மாரியம்மன் கோவில் தெரு மற்றும் திருப்பாலைக்குடி கிழக்கு தெரு, பழங்கோட்டை, மந்தனார்கோவில் தெரு, உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவுவது வழக்கமாக உள்ளது.

இந்த சூழ்நிலையை சமாளிக்கும் விதமாக, கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழங்கோட்டை அருகாமையில் அமைந்துள்ள பெரிய ஊரணியை பொதுமக்கள் நம்பி இருக்கின்றர். அந்த குளத்தில் மழை காலங்களில் தேங்கக் கூடிய தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான குடும்பத்தினர் டேங்கர்களில் வரும் தண்ணீரை ஒரு குடம் ரூ.5 முதல் ரூ.10 வரை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஏழை எளிய மக்கள் இந்த குளத்தில் உள்ள தண்ணீரை எடுத்துக் கொண்டு சென்று வடிகட்டி பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு சரியான மழை பெய்யாமல் போனதால் இந்த ஊரணியில் தண்ணீர் நிரம்ப வில்லை. அந்த தண்ணீரும் கோடை காலத்தில் விரைவாக வற்றியது. இதனால் தற்பொழுது குளம் தண்ணீரின்றி வறண்டு பாலைவனம் போல் காட்சியளிக்கிறது. இதனால் இந்த குளத்து நீரை பயன்படுத்தி வந்த மக்களும் தற்பொழுது தண்ணீரை விலை கொடுத்து வாங்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் இந்த ஊராட்சிக்கு விநியோகிக்கப்படும் குடிதண்ணீரும் குறைந்த அளவே வருகின்றது.

இதனால் பெரும்பாலானோர் டேங்கர் தண்ணீரை விலை கொடுத்து வாங்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையை போக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் வழங்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அப்பகுதியை சேர்ந்த பசுருல் ஹக் என்பவர் கூறுகையில்,
‘‘எங்கள் ஊருக்கு சரியான முறையில் காவிரி கூட்டுக் குடிநீர் சப்ளை இல்லாமல் உள்ளது. அதனை சமாளிக்கும் வகையில் பெரிய ஊரணியில் உள்ள தண்ணீர் ஜீவநதி போல் இருந்து வந்தது. தற்பொழுது அதுவும் வறண்டு விட்டதால் தண்ணீர் பிரச்னை அதிகரித்துள்ளது. விலை கொடுத்து தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது.

எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் உப்பு சுவையுடன் இருப்பதால் கிணறு, போர்வெல் எதுவும் உதவாது. இந்த நிலையை போக்கும் விதமாக பொதுமக்களுக்கு முறையான குடிநீர் கிடைத்திட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து எங்களது தண்ணீர் பஞ்சத்தை போக்க வேண்டும்’’ என்றார்.

The post ஆர்.எஸ்.மங்கலம் அருகே தண்ணீரின்றி முழுவதும் வறண்ட பெரிய ஊரணி: குடிநீருக்காக மக்கள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : R.R. ,mangalam ,R. S.S. ,Dinakaran ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்தும் மெகா சைஸ் பள்ளம்