×

வங்கதேசம் செல்லும் 3 விமானங்கள் ரத்து புற்றுநோய் பாதிப்பால் உயிருக்கு போராடும் மனைவியுடன் தவிக்கும் 73 வயது முதியவர்: சென்னை விமான நிலையத்தில் சோகம்

சென்னை: வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக, சென்னையில் இருந்து வங்கதேசம் செல்லும் 3 விமானங்கள் 2 நாட்களாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக வங்கதேசத்தை சேர்ந்த 73 வயது முதியவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் 61 வயது மனைவியுடன் சொந்த ஊர் திரும்ப வழியில்லாமல், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தவித்து வருகிறார். இது, பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வங்கதேசத்தைச் சேர்ந்தவர் சுசில் ரஞ்சன் (73). இவரது மனைவி புரோவா ராணி (61). புற்றுநோயால் பாதிக்கப்பட்ட புரோவா ராணி வங்கதேச மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் நோய் குணமடையவில்லை. இதையடுத்து சுசில் ரஞ்சன், தனது மனைவியை மருத்துவ சிகிச்சைக்காக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு விமானத்தில் சென்னைக்கு அழைத்து வந்தார். அதன் பின்பு வேலூரில் உள்ள சிஎம்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனாலும் மனைவி முழுமையாக குணமடையவில்லை.

இந்நிலையில் தனது மனைவியுடன் சொந்த நாடான வங்கதேசத்திற்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) பகல் 2 மணி அளவில் சென்னையில் இருந்து வங்கதேச தலைநகர் டாக்கா செல்லும், இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் மனைவியுடன் பயணம் செய்ய டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து இருந்தார். ஆனால் வங்கதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக, சென்னையில் இருந்து டாக்கா செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, தம்பதி இருவரும் சொந்த ஊர் செல்ல முடியாமல், சென்னை விமான நிலைய போர்டிகோ பகுதியில் தங்கி தவித்து வருகின்றனர். மனைவி மிகவும் நோய் வாய்ப்பட்டு, ஆபத்தான நிலையில் இருக்கிறார். இது சம்பந்தமாக இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகளை கேட்ட போது, வங்கதேசத்தில் நிலவும் சூழ்நிலை காரணமாக, விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதில் எதுவும் செய்வதற்கு இல்லை என்றனர். சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில், இதுகுறித்து அந்த நாட்டு தூதரக அதிகாரிகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனாலும் நாங்கள் மனிதாபிமானம் கருதி, சேவை அமைப்புகள் மூலமாக, அவர்களுக்கு உதவுவதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் என்றனர்.

The post வங்கதேசம் செல்லும் 3 விமானங்கள் ரத்து புற்றுநோய் பாதிப்பால் உயிருக்கு போராடும் மனைவியுடன் தவிக்கும் 73 வயது முதியவர்: சென்னை விமான நிலையத்தில் சோகம் appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,Chennai airport ,Chennai ,
× RELATED சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்...