×

மாத்தூர் தொட்டி பாலத்தில் இருந்து குதித்தவர் கபடி வீராங்கனை

*தோழி பேசாததால் தற்கொலை செய்து கொண்ட சோகம்

குலசேகரம் : கன்னியாகுமரி மாவட்டம் கோதையார் குற்றியார் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (50). அவரது மனைவி தவமணிதேவி (40). இந்த தம்பதிக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உண்டு. 2 மகள்களுக்கு திருமணமாகி விட்டது. மகன் பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். கடைசி மகள் அபிநயா (16) பேச்சிப்பாறை உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கபடி வீராங்கனை ஆவார்.

தற்போது மகள் படிப்புக்காக செல்வம் தனது குடும்பத்துடன் பேச்சிப்பாறை அருகே மணியன்குழி பகுதியில் வசித்து வந்தார். இந்தநிலையில் அபிநயா பேச்சிப்பாறை காந்தி நகரை சேர்ந்த பி.எஸ்சி. நர்சிங் படிக்கும் கல்லூரி மாணவியிடம் கடந்த 4 ஆண்டுகளாக நெருங்கிய தோழியாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக மாணவி அபிநயாவிடம் கல்லூரி மாணவி சரியாக பேசவில்லையாம்.

இதனால் அபிநயா வருத்தத்தில் இருந்து வந்தாராம். தோழி பேசாதது குறித்து தாயிடம் கூறி வருந்தி உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் அபிநயா பெற்றோரிடம் கபடி விளையாடி விட்டு வருவதாக கூறி விட்டு மற்றொரு தோழியுடன் வெளியில் சென்றார். ஆனால் அவர்கள் கபடி விளையாட செல்லவில்லை. அதற்கு பதிலாக சுற்றுலா பகுதியான மாத்தூர் தொட்டி பாலத்துக்கு சென்றுள்ளனர்.

பின்னர் அங்கு அபிநயா நீண்ட நேரமாக செல்போனில் யாரிடமோ பேசி உள்ளார். இதையடுத்து 2 பேரும் பாலத்தில் நின்றனர். அப்போது திடீரென யாரும் எதிர்பாராத வகையில் அபிநயா தொட்டி பாலத்தில் இருந்து கீழே குதித்தார். தகவல் அறிந்த போலீசார், படுகாயம் அடைந்து கிடந்த அபிநயாவை மீட்டு குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அபிநயா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற மாணவியின் பெற்றோர் மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதையடுத்து போலீசார் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தோழி பேசாததால் பிளஸ்-2 மாணவி பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post மாத்தூர் தொட்டி பாலத்தில் இருந்து குதித்தவர் கபடி வீராங்கனை appeared first on Dinakaran.

Tags : Kabadi Weerangana ,KULASEKARAM ,RICHAM ,KANNYAKUMARI DISTRICT ,Thavamanidevi ,
× RELATED குலசேகரம் அருகே ஜீப் மோதி தொழிலாளி படுகாயம்