×

ரூ 4.50 லட்சத்துக்கு விற்கப்பட்ட 7 வயது சிறுமியை திருமணம் செய்த 38 வயது நபர்: குழந்தை கடத்தல், போக்சோ பிரிவுகளில் கைது

போபால்: ரூ.4.50 லட்சத்துக்கு விற்கப்பட்ட 7 வயது சிறுமிக்கும் 38 வயது நபருக்கும் நடந்த திருமண விவகாரத்தில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டம் மணியா அடுத்த விர்ஜாபுரா கிராமத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 7 வயது சிறுமிக்கும், 38 வயது ஆணுக்கும் குழந்தை திருமணம் நடந்ததாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து போலீசாருடன் சென்ற குழந்தைகள் நல அலுவலர்கள், சம்பந்தப்பட்ட சிறுமியை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் எஸ்பி மனோஜ்குமார் கூறுகையில், ‘விர்ஜாபுரா கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமிக்கும், மணியா பகுதியை சேர்ந்த 38 வயதான பூபால் சிங் என்பவருக்கும் கடந்த மே 21ம் தேதி திருமணம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட கிராமத்தில் நேரில் சென்று பார்த்த போது, திருமணமான சிறுமி கையில் மருதாணி பூசப்பட்ட நிலையில், மொபைல் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார். தொடர் விசாரணையில், அந்த சிறுமியை அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து ரூ.4.50 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியதாகவும், அதற்கு அந்த சிறுமியின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இவ்விவகாரத்தில் பூபால் சிங் உள்ளிட்ட சிலர் மீது குழந்தைகள் கடத்தல், குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செயலில் எத்தனை பேர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பூபால் சிங் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட சிறுமியை மீட்டு, குழந்தைகள் நல அலுவலர்களிடம் ஒப்படைத்துள்ளோம். அவர்கள் காப்பகத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்’ என்றார்.

The post ரூ 4.50 லட்சத்துக்கு விற்கப்பட்ட 7 வயது சிறுமியை திருமணம் செய்த 38 வயது நபர்: குழந்தை கடத்தல், போக்சோ பிரிவுகளில் கைது appeared first on Dinakaran.

Tags : Bopal ,
× RELATED போபால் கூட்டம் ரத்தான நிலையில் 5 மாநில...