நாமக்கல், நவ.21: வாக்காளர் பட்டியல் பார்வையாளர், இன்று நாமக்கல் மாவட்டத்துக்கு வருகிறார். பொது மக்கள் அவரை நேரில் சந்தித்து புகார் அளிக்கலாம்.இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி, அடுத்த மாதம் 15ம்தேதி வரை நடைபெறுகிறது. 18 வயது நிரம்பியவர்கள் வாக்குசாவடி மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஜனவரி 20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணிகளை மேற்பார்வையிடும் பொருட்டு, வாக்காளர் பட்டியல் பார்வையாளர், தமிழ்நாடு செய்தித்தாள்கள் மற்றும் காகிதங்கள் துறை, மேலாண்மை இயக்குனர் சிவசண்முக ராஜா நாமக்கல் மாவட்டத்துக்கு இன்று (21ம்தேதி) வருகிறார். பொதுமக்கள் வாக்காளர் பட்டியல் தொடர்பான கோரிக்கைகள் எதுவும் இருந்தால், பார்வையாளரை இன்று 11 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் சந்தித்து புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.