சேந்தமங்கலம், அக்.30: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவரும், புதுச்சத்திரம் முன்னாள் ஒன்றியக்குழு தலைவருமான செங்கோட்டுவேல் காலமானார். இவரது மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், செங்கோட்டுவேல் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் இரங்கல் கடிதம் மூலம் தெரிவித்தார். அந்த கடிதத்தை, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார், புதுச்சத்திரம் அடுத்த குள்ளப்பநாயக்கன்பாளையத்திற்கு நேரில் சென்று, அவரது அண்ணன் மகன்கள் விஜயகுமார், ரத்தினகுமார் ஆகியோரை சந்தித்து, நேரில் வழங்கி ஆறுதல் கூறினார். இதில் மாவட்ட துணைச் செயலாளர் ராமலிங்கம், ஒன்றிய செயலாளர் கௌதம், கதிராநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.