ஊட்டி, அக். 28: ஊட்டியில் இருந்து மசினகுடி செல்லும் கல்லட்டி பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. சுற்றுலா நகராமான ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளி நாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவு வருகின்றனர். இது போன்று இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் இயற்கை எழில் கொஞ்சும் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் மசினகுடி போன்ற பகுதிகளுக்கு செல்கின்றனர். பெரும்பாலானவர்கள் கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் பிரதான சாலையாகவும் பயன்படுத்துகின்றனர்.
ஆனால், இச்சாலை தலைகுந்தா முதல் வாழைத்தோட்டம் வரை செங்குத்தான மலைப்பாதையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இச்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக, கல்லட்டி மலைப்பாதையில் செங்குத்தான சாலையில் வாகனங்கள் பிரேக் பிடிக்காமல் கவிழ்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், இச்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும், விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதனை தொடர்ந்து தற்போது நெடுஞ்சாலைத்துறையினர் கல்லட்டி மலைப்பாதையில் செங்குத்தான சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் இனி இச்சாலையில் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.