×

வாலிபரை கத்தியால் குத்திய பக்கத்து வீட்டுக்காரருக்கு ஒராண்டு சிறை

கூடலூர்,செப்.29: கூடலூரை அடுத்துள்ள காளம்புழா கொக்காகாடு பகுதியில் வசிப்பவர்கள் கிரிஷ் குமார் (22), முகமது அலி (48). இருவரும் அடுத்தடுத்து உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர். கிரிஷ் குமார் வீட்டுநாய் அடிக்கடி முகமது அலியை பார்த்து குரைத்ததோடு, அவரை துரத்துவதுமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 16ம்தேதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்தகராறில் முகமது அலி ஆத்திரத்தில் கத்தியால் கிரீஷ்குமாரை குத்தினார்.காயமடைந்த கிரீஷ்குமார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று திரும்பி உள்ளார். இதுதொடர்பாக கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இவ்வழக்கு  கூடலூர் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. இதில் முகமது அலிக்கு உதவி அமர்வு நீதிபதி வெங்கடாசலம் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Tags : neighbor ,jail ,
× RELATED புழல் சிறையில் பரபரப்பு காவலருக்கு...