சாயல்குடி, ஆக.22: ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 107 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 4,133 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் மாவட்டத்தின் பரவலான கிராம பகுதிகள், ராமநாதபுரம், பரமக்குடி, கீழக்கரை நகராட்சி பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு பரிசோதனை முடிவின் படி நேற்று ஒரே நாளில் 107 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனைகள், சிறப்பு வார்டுகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,240 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று வரை 3,660 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு இலக்க எண்ணில் இருந்தது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 107 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் மாவட்டத்திற்குள் கட்டுபாடுகள், அரசு விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.