×

சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் மருத்துவமனைகளை நாட வேண்டும்

அரியலூர், மார்ச் 13: சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவமனையை நாட வேண்டுமென பொதுமக்களுக்கு கலெக்டர் ரத்னா அறிவுரை வழங்கினார். அரியலூர் அருகே ஆண்டிப்பட்டாக்காடு கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ரத்னா தலைமை வகித்து வருவாய்த்துறை சார்பில் 5 பேருக்கு வீட்டுமனை பட்டா ஆணை, 2 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 4 பேருக்கு திருமண உதவித்தொகை, 2 பேருக்கு இயற்கை மரண உதவித்தொகை ஆணை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2 பேருக்கு இலவச தையல் இயந்திரங்களை வழங்கினார். பின்னர் கலெக்டர் ரத்னா பேசுகையில், காய்ச்சல், இருமல் மற்றும் சளி, உடல்சோர்வு, ஒரு சிலருக்கு மூச்சு திணறல், தொடர்ச்சியான தொண்டை வலி இருந்தால் கொரோனா வைரஸ் நோயின் அறிகுறிகளாகும்.

இந்நோய் அறிகுறிகள் கண்ட நபர் இருமும் போதும், தும்மும் போதும் வெளிப்படும் நீர் திவலைகள் மூலம் நேரடியாக பரவுகிறது. இருமல் மற்றும் தும்மல் மூலம் ஏற்படும் கிருமிகளை உடைய நீர் திவலைகளை படிந்துள்ள பொருட்களை தொடும்போது கைகள் மூலமாகவும் பரவுகிறது. தினமும் 10 முதல் 15 முறை கைகளை சோப்பு போட்டு நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இருமும் போதும், தும்மும் போதும், வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை கொண்டு மூடி கொள்ள வேண்டும். சிகிச்சை தரும் அனைத்து மருத்துவமனைகளிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தமாக துடைத்து பராமரிக்க வேண்டும். தொண்டை வலி இருந்தால் வெண்ணீரில் சிறிது உப்பு போட்டு தொண்டையில் படும்படி கொப்பளிக்க வேண்டும்.
சளி மற்றும் இருமல், காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகிலுள்ள மருத்துவரை அணுக வேண்டும்.

இளநீர், ஓ.ஆர்.எஸ் கஞ்சி போன்ற நீர்சத்து மிகுந்த ஆகாரங்களை பருக வேண்டும். பெண்கள் ஊட்டச்சத்து உள்ள உணவுகள் உட்கொள்ளுவதன் மூலம் உடலில் அதிக ஊட்டச்சத்து கிடைக்கிறது. இதன்மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மேலும் 24 மணி நேர உதவி எண் 011 -23978046-ல் தகவல் தெரிவிக்கலாம். மேலும் 104 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றார். முகாமில் வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், செய்தி மக்கள் தொடர்புத்துறைகளின் சார்பில் பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்ததை பொதுமக்கள் பார்வையிட்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி, திட்ட இயக்குனர்கள் சுந்தரராஜன், ஜெயராமன், துணை ஆட்சியர் ஏழுமலை, ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ் செல்வி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் சரஸ்வதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : hospitals ,
× RELATED இந்தியாவில் முதன்முறையாக குடல்...