×

திருவள்ளூரில் தண்டவாளத்தை கடக்காதவாறு கம்பி வலை பொருத்தி நடைமேடை அடைப்பு

திருவள்ளூர், பிப். 28: சென்னை-திருவள்ளூர்-திருத்தணி மற்றும் வேலூர், காட்பாடி வழியாக திருப்பதி, ரேணிகுண்டா, புத்தூர், மும்பை, பெங்களூரு, புதுதில்லி விரைவு ரயில்களும், புறநகர் ரயில்கள், சரக்கு ரயில்கள் என மொத்தம் 210க்கும் மேற்பட்ட நடைகள் இவ்வழியே சென்று திரும்புகின்றன. இதில் புறநகர் ரயில்கள் மட்டும் 170 நடைகள் சென்று திரும்புகின்றன. இந்த ரயில்களில் நாள்தோறும் திருவள்ளூர் பகுதிகளில் இருந்து தனியார் நிறுவன பணியாளர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், மாணவ, மாணவியர் என ஒரு லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர்.இதன் மூலம் ரயில்வே நிர்வாகத்திற்கு ஆண்டுதோறும் ₹15 கோடி வரை வருவாய் கிடைத்து வருகிறது. இப்பாதையில் அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரையிலும், அதேபோல், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதில் சென்னையில் இருந்து வருவோரும், திருத்தணி, வேலூர், காட்பாடியில் இருந்து வருவோரும் திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வருகின்றனர். அப்போது, 6 நடைமேடைகள் உள்ள திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருபுறமும் தண்டவாளத்தை அடிக்கடி கடந்துதான் பெண்களும், குழந்தைகளும் செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில், திருவள்ளூர் ரயில் நிலையத்தில், பயணிகள் நடைமேடை 1மற்றும் 2 இடையே பயணிகள்  தண்டவாளத்தை கடக்காதவாறு, கம்பி வலையால் சென்னை டிஆர்எம் உத்தரவின் பேரில் நேற்று அடைக்கப்பட்டது. இதனால் வயதான பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தததால் பரபரப்பு ஏற்பட்டது. முடிவில் வேறு வழியின்றி நடை பாலத்தில் ஏறி சென்றனர்.

Tags : Thiruvallur ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...