×

வில்லிபாளையம் அரசு பள்ளியில் முப்பெரும் விழா

பரமத்தி வேலூர், பிப்.26: நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வில்லிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி கல்வி சீர் வழங்கும் விழா, விளையாடு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் பள்ளியின் ஆண்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.இவ்விழாவில் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களும் பள்ளிக்கு தேவையான டேபிள், சேர், பொருட்கள் மாணவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட பொருட்களை சீர் வரிசையாக ஊர்வலமாக பள்ளிக்கு எடுத்து வந்தனர். இதனை பள்ளியின் தலைமை ஆசிரியை செல்வி பெற்றுக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சாரதா, பரமத்தி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திலகவதி வெற்றிவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவியர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர். தொடர்ந்து பள்ளி ஆண்டுவிழாவில் மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் பரமத்தி வட்டார வள மையம் சார்பில் ஆசிரிய பயிற்றுனர்கள் புவனேஸ்வரி, நிர்மலா மற்றும் பெற்றோர்கள், ஆசிரிய ஆசிரியைகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : ceremony ,Villipalayam Government School ,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா