தேவதானப்பட்டி, பிப். 18: தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு நதியின் உபவடி நிலப்பகுதியில் உள்ள கெங்குவார்பட்டி கிராமத்தை நீர்வள நிலவள திட்ட மாதிரி கிராமமாக தமிழ்நாடு வேளாண்மைத்துறை தேர்ந்தெடுத்துள்ளது. இத்துறையின் கீழ்வரும் நீர்வள ஆதாரத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனைத்துறை, வேளாண் பொறியியல் துறை, மீன்வளத்துறை, தமிழ்நாடு பல்கலைக்கழகம் உள்ளிட்ட துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் இந்த கிராமத்திற்கு முன்னுரிமை தரும். இக்கிராமத்தை மாதிரி கிராமமாக தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட மாதிரி திட்ட வேளாண்மை துணை இயக்குனர் இளங்கோவன், மஞ்சளாறு அணை உதவிப்பொறியாளர் சேகரன் ஆகியோர் கொண்ட தேர்வுக்குழுவின் நடவடிக்கை குறித்த விளக்கம், கிராமத்தின் தற்போதைய நிலை ஆகியவை குறித்த வரைபட விளக்கம், கெங்குவார்பட்டி பெண் விவசாயிகளால் கால்நடை மருத்துவமனையில் கோலமிட்டு விளக்கப்பட்டது. விவசாயிகளை ஒன்றிணைத்து நீர்நிலைகளின் பயன்கள் குறித்த விளக்க ஊர்வலமும் வயல்வெளியில் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் வேளாண்மை உதவி இயக்குனர் சென்றாயன் தலைமை வகித்தார். வேளாண்மை அலுவலர் பாண்டி வரவேற்றார். உதவி வேளாண்மை அலுவலர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் உஷாராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உதவி வேளாண்மை அலுவலர் குணசேகரன் நன்றி கூறினார்.