இளையான்குடி, பிப்.18: வண்ணாரப்பேட்டை தடியடி சம்பவத்தை கண்டித்து இளையான்குடி தனியார் கல்லூரியில் மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில், குடியுரிமை திருத்த சட்டத்தை நீக்க கோரியும், சென்னை வண்ணாரப்பேட்டை தடியடி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் நேற்று காலை மாணவர்கள் திடீரென தர்ணா போராட்டம் நடத்தினர். சுமார் 60 மாணவர்கள் மெயின் கேட்டின் அருகே உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் பழனிமுத்து தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சரியாக இடைவேளையின்போது வகுப்பறைக்கு செல்வோம் எனவும், அதுவரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என மாணவர்கள் சார்பில் கூறப்பட்டது. 11.50 மணிக்கு கல்லூரி இடைவேளையில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மாணவர்களின் திடீர் போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.