திருவில்லிபுத்தூர், பிப்.17: திருவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தென்மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டிகளில் இரண்டு வயது முதல் 14 வயது வரையிலான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் கோயம்புத்தூரில் நடைபெற உள்ள மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
போட்டிகளின் முடிவில் அரிமா மெட்ரிக் பள்ளி முதல் பரிசையும், அரிமா சர்வதேச பள்ளி இரண்டாம் இடத்தையும், சிஇஓஏ மெட்ரிக் பள்ளி மூன்றாம் இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் தாளாளர் கிருஷ்ணமூர்த்தி, பள்ளி முதல்வர் முருகன், துணை முதல்வர் திவ்யநாதன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.