பெரம்பலூர், ஜன. 28: நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்கள் மற்றும் வரியில்லா இனங்களை காலதாமதமின்றி செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பெரம்பலூர் நகராட்சி ஆணையர் தாண்டவமூர்த்தி தெரிவித்திருப்பதாவது: வீடு மற்றும் வணிக பயன்பாட்டில் உள்ள அனைத்து வரி விதிப்புகளுக்கும், 2017-2018ம் ஆண்டில் சொத்து வரி மறு அளவீடுகள் மற்றும் 2018-2019ம் ஆண்டு சொத்துவரி சீராய்வு மூலம் உயர்த்தப்பட்ட அனைத்து வரிகளையும் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டு பொதுமக்களிடம் பழைய வரியை வசூல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கின்ற பொதுமக்கள், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம் மற்றும் குத்தகை இனங்களுக்கான கடை வாடகையை உடனடியாக பழைய நகராட்சி அலுவலகம் மற்றும் புதிய நகராட்சி அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்களில் செலுத்தி ரசீது பெற்று கொள்ளலாம். தவறும்பட்சத்தில் ஜப்தி, கோர்ட் நடவடிக்கை மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு, பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் அனைத்து விடுமுறை நாட்களிலும் பொதுமக்களின் வசதிக்காக கணினி வசூல் மையங்களும் செயல்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.