திருமயம், ஜன.21: அரிமளத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் கஜா புயலின் போது சேதமடைந்த மின்கம்பத்தை சரி செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2018ம் ஆண்டு இறுதியில் அப்பகுதி மக்கள் சற்றும் எதிர்பார்க்க வகையில் புயல் வீசியது. இந்த புயலுக்கு கஜா என பெயரிட்டிருந்த நிலையில் புயிலின் கோர தாண்டவத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனிடையே அரிமளம் எட்டாம்மண்டகப்படி அருகே சிவகமலம் பள்ளி சாலையில் பகுதியில் உள்ள இரும்பு குழாயால் ஆனா மின் கம்பம் ஒன்று கஜா புயலினால் சேதமடைந்தது.
இந்நிலையில் சேதமடைந்த மின்கம்பம் இது நாள் வரையில் சரி செய்யப்படாததால் சேதமடைந்த மின் கம்பம் மேலும் சேதமடைந்து ஒடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த சேதமடைந்த மின்கம்பம் புதுக்கோட்டை-ஏம்பல் செல்லும் முக்கிய சாலையில் இருப்பதோடு தனியார் பள்ளி மாணவர்கள் அதிகம் நடமாடும் இடத்தில் இருப்பதால் அச்சத்துடன் பொதுமக்கள் அப்பகுதியில் நடமாடி வருகின்றனர். மேலும் சேதமடைந்த மின்கம்பத்தில் இருந்த தெருவிளக்கு பழுதான நிலையில், அதனை சரி செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கஜா புயலின் போது பழுதடைந்த மின்கம்பத்திற்கு பதிலாக புதிய மின்கம்பம் நட நடவடிக்கை எடுப்பதோடு பழுதடைந்த தெரு விளக்கையும் சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.