×

வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காடு ஊராட்சியில் மின்விளக்குகள் இல்லாத ஆபத்தான நெடுஞ்சாலை வளைவு: தொடரும் விபத்துக்களால் வாகன ஓட்டிகள் அவதி

வாலாஜாபாத், ஜன.19: வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காடு ஊராட்சியில் மின்விளக்கு இல்லாமல் ஆபத்தான நெடுஞ்சாலை வளைவால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுகிறது. இதானல், வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காடு ஊராட்சியில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் பல நூற்றாண்டு பழமையான எல்லையம்மன் கோயில் உள்ளது. இங்கு தினமும் காஞ்சிபுரம், சென்னை, தாம்பரம், பெரும்புதூர், சுங்குவார்சத்திரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பஸ், கார், வேன் உள்பட பல்வேறு வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
மேலும், ஊத்துக்காடு சாலை வழியாக புத்தகம் நாயக்கன்குப்பம், சிங்காடிவக்கம், சின்னிவாக்கம், மருதம், கரூர் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகிறார்கள். ஆனால், ஊத்துக்காடு சாலையின் இருபுறமும் செடி கொடிகள் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது. இதனால், இரவு நேரங்களில் சாலை இருப்பதே தெரியாத நிலை உள்ளது. இதையொட்டி, அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக பைக்கில் செல்வோர், படுகாயம் அடைவது வாடிக்கையாக உள்ளது.

இதுகுறித்து இப்பகுதி கிராம மக்கள் கூறுகையில், ‘வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு கிராம சாலை வழியாக தினமும் 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் சென்று வருகின்றனர். இங்குள்ள எல்லையம்மன் அம்மன் கோயில் ஒன்று உள்ளது.இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் பல வாகனங்களில் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இரவு நேரங்களில், அவர்கள் வந்து செல்லும்போது, இந்த சாலையை ஒட்டிய வளைவு பகுதிகளில் இருபுறமும் முட்புதர்கள் உள்ளதால், அவர்கள் விபத்தை சந்திக்கின்றனர்.மேலும், இதே பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த டாஸ்மாக் கடைகளுக்கு வரும் குடிமகன்கள் போதை தலைக்கு ஏறி அதிவேகமாக சென்று இந்த வளைவுகளில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து வருவதும் தொடர் கதையாக உள்ளது.
இதனை தடுக்க, மாவட்ட நிர்வாகம் சாலையை சீரமைத்து சாலையை ஒட்டியுள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும். அப்போதுதான், விபத்துக்களை குறைக்க முடியும் என்றனர்.

Tags : highway ,Valajabad Union Pudukkadu ,accidents ,Motorists ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!