சிவகங்கை, டிச. 13: சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி மாணவி சகானா மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தர்மபுரி மாவட்டம் நல்லானூரில் மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டி நடந்தது. இப்போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். மாவட்ட, மண்டல அளவில் வென்று மாநில போட்டிக்கு தகுதி பெற்ற சாம்பவிகா பள்ளி மாணவர்கள் மூன்று பேர் பல்வேறு பிரிவு குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்றனர். இதில் எட்டாம் வகுப்பு மாணவி சகானா 14வயதிற்குட்பட்டோருக்கான 40:42 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். சாதனை படைத்த மாணவி சகானாவிற்கு பள்ளிச் செயலர் சேகர், தலைமையாசிரியர் முத்துக்குமார், உதவி தலைமையாசிரியர் தியாகராஜன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர்கள் வீரபத்திரன், சரவணன், கண்ணாத்தாள், பயிற்சி ஆசிரியர் நிமலன், மாணவியின் பெற்றோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.