ஊட்டி, டிச.5:மஞ்சூர் அருகே ஓணிக்கண்டி பகுதியில் இருந்து அன்னமலை கோயில் செல்லும் சாலையோரம் அமைக்கப்பட்ட மின் கம்பத்தை சுற்றிலும் உள்ள மண் மழையில் அடித்து செல்லப்பட்டதால் விழும் நிலையில் உள்ளது.
மஞ்சூர் அருகேயுள்ள ஓணிக்கண்டி அருகேயுள்ள அன்னமலை பகுதியில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு அருகாமையில் காமராஜ் நகர் பகுதி உள்ளது. இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்வாரியம் சார்பில் ஓணிக்கண்டி பகுதியில் இருந்து காமராஜ் நகர் மற்றும் அன்னமலை கோயில் வரை புதிதாக மின் கம்பங்கள் அமைக்கப்பட்டது. இதில் சில மின் கம்பங்கள் முறையாக அமைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே இதில் ஒரு மின் கம்பத்தை சுற்றிலும் போடப்பட்ட கான்கீரிட் நன்கு ஆழமாக போடப்படவில்லை. இதனால் அண்மையில் பெய்த கனமழையால் சுற்றிலும் இருந்த மண் அடித்து செல்லப்பட்டு மின் கம்பகத்தில் கான்கீரிட் தொங்கி கொண்டிருக்கிறது. மேலும் மண் அடித்து செல்லப்பட்ட நிலையில் மின் கம்பம் விழக்கூடிய நிலையில் உள்ளது. எனவே இதனை சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.