ஒட்டன்சத்திரம், நவ.20: தினகரன் செய்தி எதிரொலியாக ரெட்டியார்சத்திரம் அருகே நீலமலைக்கோட்டையில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த நீர்நிலை ஓடைப்பகுதியை அதிகாரிகள் அதிரடியாக மீட்டதையடுத்து, ஆக்கிரமிப்பாளர் மீது வழக்கு பகுதி செய்து போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் நீலமலைக்கோட்டையில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனிநபர்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து, விவசாயம் செய்து வந்தனர். அதை மீட்கக்கோரி தினகரன் நாளிதழில் கடந்த நவ.15ந் தேதி செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது. அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவின்படி வட்டாட்சியர் பாண்டிச்செல்வி, துணை வட்டாட்சியர் முத்துமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா, தலைமை நில அளவையர் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் பிரியா, கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ் உள்ளிட்ட அதிகாரிகள் ஜோத்தால்நாயக்கன்கோம்பை பகுதியில் ஆய்வு செய்தனர்.
அப்போது தனிநபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் ஒரு ஏக்கர் அரசு நிலம் மற்றும் இரு போர்வெல் ஆகியவை மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தில் நீலமலைக்கோட்டை விழுதுகள் அமைப்பின் சார்பில் பனை விதைகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் நிர்நிலை ஓடைகளை ஆக்கிரமிப்பு செய்திருந்த கருப்புச்சாமி, திருமலைசாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, திருமலைசாமி கைது செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதி விவசாயிகள் தினகரன் நாளிதழுக்கு தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.