தேனி, நவ. 19: தேனி மாவட்டத்தில் மேகமலை வனப்பகுதியில் ஆண்டுக்கு 10 மாதங்கள் தேன் கிடைக்கும். தற்போது வனவளம் பெரிதும் அழிக்கப்பட்டதால் ஆண்டுக்கு மூன்று மாதங்கள் மட்டுமே தேன் கிடைக்கிறது என ஆதிவாசி கிராம மக்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
தேனி மாவட்டத்தில் மேகமலை வனப்பகுதியில் 21 மலைக்கிராமங்கம், 21 ஆதிவாசி கிராமங்கள் உள்ளன. இதில் மலைக்கிராம மக்களில் சிலரும், ஆதிவாசி மக்கள் பெருமளவிலும் தேன் எடுத்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து ஆதிவாசி மக்கள் கூறியதாவது: வழக்கமாக ஜூன் மாதத்தில் தேன் எடுக்க தொடங்குவோம்.
அடுத்த ஆண்டு மார்ச் வரை தொடர்ச்சியாக 10 மாதங்களுக்கு தேன் கிடைக்கும். தற்போது வனவளம் பெருமளவில் அழிக்கப்பட்டு விட்டது. இதனால் உயிரின சுழற்சி பாதிக்கப்பட்டு வனத்தின் ஒட்டு மொத்த வளமும் குறைந்துள்ளது. இதனால் சில ஆண்டுகளாகவே தேன் நவம்பர் மாதம் தான் எடுக்க முடிகிறது. நவம்பர், டிசம்பர், ஜனவரி வரை தேன் கிடைக்கும். நாங்கள் தேன் எடுத்து வந்து வியாபாரிகளிடம் சுத்தமான தேன் கிலோ 500 ரூபாய்க்கு விற்பனை செய்வோம். அவர்கள் அதனை வெளிமார்க்கெட்டில் கிலோ 800 ரூபாய்க்கு விற்கின்றனர். சுத்தமான தேன் கிடைப்பது மிக, மிக அரிது. எனவே, மேகமலை மலைத்தேன் வாங்க பலரும் முன்கூட்டிய பணம் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு கூட எங்களால் தேன் விநியோகம் செய்ய முடியவில்லை என்று கூறினர்.