விருதுநகர், நவ. 12: ஆமத்தூரில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலத்தை பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்து, கடை போட்டுள்ளதை அகற்றக்கோரி, கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். ஆமத்தூர் கிராமம் காமராஜர் காலனியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் தலைமையில் கிராம மக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆமத்தூர் பெரியகுளம் கண்மாய் தெற்கு கரைக்கும் வெள்ளுர் செல்லும் ரோட்டுக்கும் இடையே பெரிய பள்ளம் இருந்தது. அந்த பள்ளத்தை ஆமத்தூரில் வீடு கட்டும் நபர்கள் மற்றும் பொதுமக்கள் குப்பை, மண் போட்டு மூடிவைத்திருந்தனர். பொது இடத்தில் கிராம மக்களுக்கான களம் அமைக்க ஏற்பாடு நடந்து வந்தது. இந்நிலையில், வேறு ஊரைச் சேர்ந்த நபர்கள் சிலர் நிலத்தை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர். இதனால், கிராமத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் நிலை உள்ளது. வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் மூலம் ஆமத்தூரில் வேற்று கிராமத்தினால் ஆக்கிரமிப்பு செய்த பொது இடத்தை மீட்டு தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.