பழநி, அக். 15: பழநி அருகே நெய்க்காரப்பட்டி குருவப்பா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முறைசாரா தொழிலாளர்களுக்கு தொழில்சார் சேவைகள் மருத்துவ முகாம் நேற்று நடந்தது. சப்கலெக்டர் உமா தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். முகாமில் துணை இயக்குநர் (காசநோய்) ராமச்சந்திரன், துணை இயக்குநர் (தொழுநோய்) பத்மாவதி, துணை இயக்குநர் (பொது சுகாதாரம்) சோமசுந்தரம், தொழிலாளர் நலத்துறை உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். பழநி வட்டாரத்தில் உள்ள செங்கல் சூளைகளில் பணிபுரியும் 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டது.பின்னர் அடையாள அட்டை பெறுபவர்களுக்கு அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மருத்துவ சேவைகள், அதன் பயன்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதில் நெய்க்காரப்பட்டி பேரூராட்சி செயல்அலுவலர் சகாய அந்தோணி யூஜின், வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஸ்வரி, பள்ளியின் தாளாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை துணை தாசில்தார் மணி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அப்துல் வகாப், சுகாதார ஆய்வாளர்கள் தியாகராஜன், சுப்பிரமணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.