×

திண்டுக்கல்லில் 4,500 லாரிகள் நிறுத்தம் ரூ.10 கோடி வர்த்தகம் பாதிப்பு

திண்டுக்கல், செப்.20:  திண்டுக்கல்லில் நேற்று நடந்த வேலை நிறுத்தத்தில் 4,500 லாரிகள் கலந்துகொண்டன. ஒருநாள் மட்டும் ரூ.10 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்தியா முழுவதும் நேற்று லாரி ஸ்டிரைக் நடைபெற்றது. திண்டுக்கல்லில் ரெகுலர் லாரி சர்வீஸ், வெளியூர்களுக்கு செல்லக்கூடிய லாரிகள் என 4500க்கும் மேற்பட்ட லாரிகள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் திண்டுக்கல்லில் இருந்து வெளிமாநிலங்களுக்கு நூல்களை ஏற்றிச் செல்வது, ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் இருந்து கேரளா மற்றும் தமிழகம் முழுவதற்கும் காய்கறி ஏற்றி செல்வது, சரக்குகளை ஏற்றிச்செல்வது போன்ற பணிகள் தடைபட்டது. நேற்று ஒரு நாள் மட்டும் ரூ.10 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் எல்லப்பன் கூறுகையில், மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் வேலை நிறுத்தம் செய்துள்ளோம். எங்களது கோரிக்கையை ஏற்று மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்டமாக தலைமை நிர்வாகிகளுடன் கலந்து பேசி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்  என்று தெரிவித்தார்.

Tags : Dindigul ,
× RELATED திண்டுக்கல்-நத்தம் ரோட்டில்...