×

தொடரும் மின்வெட்டால் முடங்கும் அலுவலக பணிகள்

சாயல்குடி, செப்.19: கடலாடி, முதுகுளத்தூர் மற்றும் கமுதி பகுதியில் அலுவலக நாட்களில் ஏற்படும் மின்வெட்டால் அலுவலக பணிகள், வங்கி பணிகள் பாதிக்கப்படுவதால், தேவையான உதவிகளை பெறமுடியாமலும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடலாடி, முதுகுளத்தூர் மற்றும் கமுதி தாலுகாகளில், யூனியன், சார்பதிவாளர், தாலுகா அலுவலகம், கல்லூரிகள், மேல்நிலை பள்ளிகள், கருவூலம், வங்கிகள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை(சான்றுகள்) வழங்க அரசு அனைத்தையும் கணினிமயமாக ஆக்கியுள்ளது. தற்போது முன்அறிவிப்பு ஏதுமின்றி திடீர், திடீரென மின் வெட்டு ஏற்பட்டது. தொடரும் மின்வெட்டால் பொதுமக்கள் தேவையான சான்றுகளை பெறமுடியவில்லை.
இந்நிலையில் மாதந்தோறும் பராமரிப்பு பணி காரணமாக சனிக்கிழமைகளில் மின்தடை ஏற்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில மாதங்களாக அலுவலக வேலை நாட்களில் மின் தடை ஏற்படுத்துவது வழக்கமாகி வரு கிறது.முதுகுளத்தூர், கடலாடி மற்றும் கமுதி பகுதியில் புதன் கிழமையான நேற்று சுமார் 8 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் அலுவலகம், வங்கி பணிகள் முடங்கியது. மருத்துவமனைகளில் நோயாளிகள் சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். எனவே வருகின்ற மாதங்களில் விடுமுறை தினங்களில் மாதாந்திர பணிகளை மேற்கொள்ள மின்சாரம் வாரியம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில்...