விளாத்திகுளம், செப். 17: விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் மனோன்மணியம் சுந்தரனார் மாதிரி உறுப்பு கல்லூரியில் இயற்கை உணவு விழிப்புணர்வு பேரணி நடந்தது. நாடு முழுவதும் செப்டம்பர் 1 முதல் 31ம் தேதி வரை இயற்கை உணவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விளாத்திகுளம் அடுத்த நாகலாபுரத்தில் மனோன்மணியம் சுந்தரனார் மாதிரி உறுப்பு கல்லூரி என்எஸ்எஸ் (எண் 205) சாா்பில் இதுகுறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் சாந்தகுமாரி தலைமை வகித்துப் பேசினார். நாட்டு நலப்பணி திட்ட தொண்டர் சண்முகவேல் வரவேற்றார். திட்ட அலுவலர் சுரேஷ்பாண்டி இயற்கை உணவின் சிறப்புகளை எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற விளாத்திகுளம் துணை தாசில்தார் ரத்தினசங்கர், மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்துத் துவக்கிவைத்தார்.
நாகலாபுரம் மனோன்மணியம் சுந்தரனார் மாதிரி உறுப்பு கல்லூரி வளாகத்தில் துவங்கிய இப்பேரணி சமத்துவபுரம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் வழியாக நாகலாபுரம் பஜார் பகுதியில் நிறைவடைந்தது. இதில் இயற்கை உணவு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஆங்கிலத் துறைப் பேராசிரியர் டார்வின் தலைமையில் மாணவ, மாணவிகள் அணிவகுத்து சென்றனர். நாட்டு நலப்பணித் திட்ட தொண்டர் காளீஸ்வரி நன்றி கூறினார்.