×

கமிசனை பெற்றுக்கொண்டு குடிமராமத்து பணியில் முறைகேடு

சிவகங்கை, ஆக. 14:  சிவகங்கை மாவட்டத்தில் நடக்கும் குடிமராமத்து பணிக்கு ஆளும் கட்சியினர், அதிகாரிகள் கமிஷன் வாங்குவது, காண்ட்ராக்டர்களிடம் பணிகளை விடுவது என பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகின்றன. சிவகங்கை மாவட்டத்தில் குடிமராமத்து பணியில் பராமரிப்பு செய்ய பெரியாறு கால்வாய்களான சீல்டு கால்வாய்க்கு ரூ.1.47 கோடி, 48 கால்வாய்க்கு ரூ.3 கோடி, லெஸ்சிஸ் கால்வாய்க்கு ரூ.65 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோல் மாவட்டம் முழுவதும் 109 கண்மாய்களை குடிமராமத்து பணிகள் மூலம் சீர் செய்ய ரூ.39.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு பணிகளும் பொதுப்பணித் துறையின் கீழ் செய்யப்படுகின்றன. ஊரக வளர்ச்சி துறை சார்பில் குடிமராமத்து பணி திட்டத்தில், ரூ.35 கோடி மதிப்பீட்டில் 300 குளங்கள், ஊரணிகள் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. குடி மராமத்து பணிகள், விவசாயிகள் நீர்ப்பாசன சங்கம் அமைத்து அதன் மூலம் செய்யப்பட வேண்டும்.

ஆனால் அவ்வாறு இல்லாமல் ஆளும் கட்சியினர் தலையீட்டில் போலி விவசாய சங்கங்கள் அமைக்கப்படுகின்றன.  ஊரகவளர்ச்சி துறை சார்பில் செய்யப்படும் குடிமராமத்து பணி ஏராளமான ஊர்களில் ஊராட்சி செயலர் பெயரில் நடக்கிறது. இதில் ஒரு பணிக்கு நான்கில் ஒரு பங்கை ஆளும் கட்சியினர், அதிகாரிகள் கமிசனாக பெற்றுக்கொண்டு யாரை வேண்டுமானாலும் பணி செய்ய அனுமதிக்கின்றனர். இதனால் விவசாய சங்கங்கள், விவசாயிகள் மேற்பார்வையில் இல்லாமல் பெரும்பாலும் காண்ட்ராக்டர்களே பணிகளை செய்து வருகின்றனர். முறைகேடாக நடக்கும் இப்பணிகளால் குடிமராமத்து பணியின் நோக்கமே கேள்விக்குறியாகி உள்ளது. பணிகளும் முழுமையாக இல்லாமல் பெயரளவில் மட்டுமே நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விவசாய சங்க நிர்வாகிகள் கூறியதாவது: குடிமராமத்து பணிகள் என்பதே விவசாயிகள் பங்களிப்போடு இருக்க வேண்டும் என்பதால் விவசாயிகளே சங்கம் அமைக்க வேண்டும். அதன் மூலம் பணிகள் செய்ய வேண்டும் என அரசு விதிமுறை உள்ளது. ஆனால் மாவட்டம் முழுவதும் ஒட்டுமொத்தமாக ரூ.80 கோடியிலான திட்டம் என்பதால் இதில் இருந்து பெரும் பணத்தை சுருட்ட ஆளும் கட்சியினர், திட்டமிட்டு செயல்படுகின்றனர். இதில் அதிகாரிகளுக்கும் பங்கு கிடைப்பதால் அவர்களும் உடந்தையாக உள்ளனர். பிரச்னை எழுந்த சில இடங்களில் மட்டும் விவசாயிகள் போர்வையில் காண்ட்ராக்டர்களை வைத்து சங்கம் பதிவு செய்து பணிகளை செய்கின்றனர். இதனால் குடிமராமத்து பணி முறையாக நடக்க வாய்ப்பில்லை. இத்திட்டம் ஆளும் கட்சியினரும், அதிகாரிகளும் பணத்தை சுருட்ட செய்ய மட்டுமே உதவியாக உள்ளது. மாவட்ட நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது. இப்பணியில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED வெப்பம் தணித்த கோடை மழை