×

கஞ்சா விற்பனை தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு: 5 பேர் கும்பலுக்கு வலை

ஆவடி, ஆக.14: ஆவடி அருகே கஞ்சா விற்கும் தகராறில் ஏற்பட்ட முன்விரோதத்தில் 2 பேரை சரமாரியாக வெட்டிய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருவேற்காடு, பவானி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (26) பிரபல ரவுடி. இவர், தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் மாலை ஆவடி, பருத்திப்பட்டு பகுதியில் உள்ள காலிமைதானத்துக்கு வந்தார். பின்னர், அனைவரும் அமர்ந்து  மது அருந்திக்கொண்டிருந்தனர்.  அப்போது ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து ராஜேஷுடன் தகராறில்  ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் மறைத்துவைத்திருந்த ஆயுதத்தை எடுத்து ராஜேஷை சரமாரியாக வெட்டியுள்ளனர். தடுத்த அவரது நண்பர் விஷாலுக்கும் வெட்டு விழுந்தது. இதை பார்த்த மற்றவர்கள் ஓடி விட்டனர்.  பலத்த காயம் அடைந்த இருவரையும்  அக்கம் பக்கத்தினர்  மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புகாரின் அடிப்படையில் ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் வழக்குப்பதிவு செய்தார். விசாரணையில், பருத்திப்பட்டு பகுதியில் புதிதாக அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் வட மாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு ஒருசிலர் கஞ்சா விற்கின்றனர்.  அதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக மர்ம நபர்கள் ராஜேஷையும், விஷாலையும் வெட்டியதாக தெரிய வந்தது.  இதனையடுத்து போலீசார், 5 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...