ஊட்டி, ஜூலை 24: நீலகிரி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு, கேரட், முள்ளங்கி, முட்டைகோஸ், பீட்ரூட், பீன்ஸ், பட்டாணி, வெள்ளை பூண்டு உள்ளிட்ட பல்வேறு மலை காய்கறிகள் பயிரிடப்படுகிறது. இது தவிர ஊட்டி அவரை அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. சமவெளிப் பகுதிகளில் இந்த அவரை வகையை அதிகளவு பயன்படுத்துவதில்லை என்ற போதிலும், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் இதனை அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். இதனால், இந்த அவரைக்கு எப்போதும் விலை சற்று அதிகமாக காணப்படும். பொதுவாக, கிலோ ஒன்று ரூ.100க்கும் தான் இருக்கும். கடந்த வாரம் வரை இந்த அவரை கிலோ ரூ.160வரை விற்பனையானது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அவரை அழுகிவிடும் என்பதால், அனைத்து விவசாயிகளும் ஒரே சமயத்தில் பறித்து சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். மார்க்கெட்டிற்கு அதிகளவு அவரை வரும் நிலையில் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கிலோ ஒன்று ரூ.30 முதல் 50 வரையே ஏலம் போகிறது. வெளி மார்க்கெட்டில் கிலோ ஒன்று ரூ.60 முதல் 89 வரையே விற்பனையாகிறது. தொடர்ந்து, மழை பெய்தால் மேலும் விலை வீழ்ச்சி ஏற்படும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.