பெண்ணாடம் ஜூலை 18: கொசப்பள்ளம் ஊராட்சியில் இருந்து பெலாந்துறை அணைக்கட்டுக்கு செல்லும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெண்ணாடம் அடுத்துள்ள கொசப்பள்ளம் ஊராட்சி வழியாக பெலாந்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமமக்கள், அந்த சாலையை அதிகமாக பயன்படுத்தி பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம் செல்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளாகவே இந்த சாலை குண்டும் குழியுமாக உள்ளது. பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆண்டுதோறும் அதிகாரிகள் பெலாந்துறை அணைக்கட்டை பார்வையிட வந்து செல்கின்றனர். இருப்பினும் சாலையை சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.