×

தோகைமலை ஒன்றிய அலுவலகம் முன் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மக்கள் முற்றுகை போராட்டம்

தோகைமலை, ஜூலை 16: தோகைமலை அருகே கூடலூர் காலனி பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கூடலூர் ஊராட்சியில் உள்ள கூடலூர் காலனியில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு போர்வெல்கள் அமைத்து ஒரு 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க் மூலம் ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கி வந்துள்ளது. இந்நிலையில் வரட்சி காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் போர்வெல் தூர்ந்து விட்ட நிலையில் டேங்குக்கு வரும் குடிநீரும் நின்று போனதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் அருகில் உள்ள விவசாய கிணறுகளில் குடிநீர் எடுத்து பயன்படுத்தி வந்துள்ளனர்.தற்போது கடுமையான வறட்சியின் காரணமாக விவசாய கிணற்றிலும் போதுமான தண்ணீர் இல்லாததால் கடந்த 6 மாதங்களாக பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க அனுமதிக்கவில்லை என்றும் வேதனை அடைந்துள்ளனர். இதனால் போதுமான குடிநீர் கிடைக்காமல் பள்ளிகள், கல்லூரிகள் கூலிவேலை உள்பட பல்வேறு பணிகளுக்கு குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வந்ததுடன், கால்நடைகளுக்கும் தண்ணீர் இல்லாமல் அவதிக்குள்ளாகி வந்துள்ளனர். இது குறித்து கூடலூர் ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய நிர்வாகத்திற்கு 2 முறை கோரிக்கை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறுகின்றனர். தெருவிளக்கு பழுது ஏற்பட்டாலும், குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டாலும் ஊராட்சி நிர்வாகம் இதுவரை சரி செய்து கொடுக்காமல் இருந்து வந்ததால் பொதுமக்களே வரி பணம் வசூல் செய்து சரிசெய்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.இதையடுத்து பொதுமக்கள் குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்தும், குடிநீர் கேட்டும் காலிக்குடங்களுடன் ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன், மேலாளர் திருஞானம், பொறியாளர் செல்வி ஆகியோர் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரு வாரத்திற்குள் புதிய போர்வெல் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை தினமும் லாரிகளில் குடிநீர் வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர்.இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். சுமார் 1 மணி நேரம் நடந்த முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED திராவிட மாடல் ஆட்சியின் 3 ஆண்டு சாதனை;...