காளையார்கோவில், ஜூன் 14: காளையார்கோவில் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் போதிய கட்டிட வசதி இல்லாததால் பள்ளிக்குழந்தைகள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று மாநிலங்களவை உறுப்பினர் டிகே.ரெங்கராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஐந்து வகுப்பறைகள் கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுள்ளது. அதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டாரக் கல்வி அலுவர்கள் சகாயச்செல்வன், ஜோசப் ஆண்டோரெக்ஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ, இளங்கோ தாயுமானவர், பொறியாளர் கவிதா, துணைவட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன், ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளி ஆசிரியர்கள் முத்துநகை, சகாயமேரி, பெற்றோர் ஆசிரியர் சங்க பொருளாளர் குணாஹாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ் அமலநாதன் செய்திருந்தார்.