போச்சம்பள்ளி, மே 25: மத்தூர் அருகே, மெடிக்கல்ஸ் உரிமையாளர் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மத்தூர் அடுத்த ராசவீதி பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் மத்தூரில் மெடிக்கல் ஸ்டோர் வைத்துள்ளார். கடந்த 21ம் தேதி, கோடை விடுமுறையையொட்டி குடும்பத்துடன் சுற்றுலா சென்றார். நேற்று காலை அனைவரும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்த ஜெயக்குமார் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த 5.5 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை பார்த்து திடுக்கிட்டார். இதுகுறித்து மத்தூர் போலீசாருக்கு ஜெயக்குமார் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
வீடு பூட்டி கிடப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள், நேற்று முன்தினம் இரவு பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. சுற்றுலா செல்வதால், நகை மற்றும் பணத்தை ஜெயக்குமார் குடும்பத்தினர் எடுத்து சென்றுவிட்டனர். இதனால், வீட்டிலிருந்த 5.5 பவுன் நகை மட்டுமே கொள்ளை போயுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.