மதுரை, மே 25: மதுரை சிறுமியை விருதுநகருக்கு ஆட்டோவில் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை செல்லூர் அகிம்சாபுரம் 4வது தெருவைச் சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் படித்து ப்ளஸ் 1 தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தோழி வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது தோழியின் அண்ணன் பிரேம்பாண்டி (21) அறிமுகமாகி கடந்த 3 வருடமாக இருவரும் போனில் பேசி பழகி வந்துள்ளனர். கடந்த 22ம் தேதி சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி வலுகட்டாயமாக ஆட்டோவில் பிரேம்பாண்டி தனது அத்தை வீடான விருதுநகருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது அவரது அத்தை சிறுமியை அழைத்து வந்த அவரை திட்டியுள்ளார். இதையறிந்த அந்த சிறுமி தனது அம்மாவிற்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். ஏன் அம்மாவிற்கு தகவல் சொன்னாய் என கூறி திட்டியதுடன், சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் அவரை அழைத்து வந்து திருமங்கலம் பஸ் நிலையத்தில் விட்டு விட்டு சென்று உள்ளார். அவர் அங்கிருந்து மதுரை வந்து, தனது அம்மாவிடம் நடந்த விபரங்களை கூறியுள்ளார். பின்னர் சிறுமி தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து பிரேம்பாண்டியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.