×

புதுக்கோட்டை அடுத்த நெடுவாசலில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசார கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு

புதுக்கோட்டை, மே 23: தமிழகத்தில் ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்தை அமுல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி வருகின்ற ஜூன் 10ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழுக்கூட்டம் ஸ்ரீதர் தலைமையில் புதுக்கோட்டையில் நடைபெற்றது.  மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன், மாநிலக்குழு முடிவுகளை விளக்கி பேசினார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விளக்கி மாவட்ட செயலாளர் கவிவர்மன் கூறியதாவது: பூமிக்கடியில் இருந்து ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக வேதாந்த குழுமத்திற்கும், ஓஎன்சிஜி நிறுவனத்திற்கும் மத்திய அரசு நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் காவிரி பாசனப்படுகையில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு துடிக்கிறது. தமிழக மக்களையும், விவசாயத்தையும் நாசமாக்கும் இத்திட்டத்தை செயல்படுத்த ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

எனவே, ஹைட்ரோகார்பன் திட்டத்தினால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதகங்களை விளக்கி வருகின்ற ஜூன் 5ம் தேதி முதல் 10ம் தேதிவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் முழுவதும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசார இயக்கத்தை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. வருகின்ற ஜூன் 5ம் எதிர்ப்பு இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சியாக மாவட்டம் முவழுதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இதனைத் தொடர்ந்து ஜூன் 8,9 ஆகிய தேதிகளில் நமது மாவட்ட எல்லையின் ஒருபகுதியாக உள்ள கந்தர்வகோட்டை அடுத்த சிவியார்குடிக்காட்டிலிருந்து ஒரு குழுவும், மற்றொரு எல்லையான மணமேல்குடியில் இருந்து ஒரு குழுவுமாக இந்த பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது. ஒவ்வொரு குழுவிலும் சுமார் 100 பேர்  இருசக்கர வாகனத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களும் பங்கேற்பார்கள்.

பிரசாரக்குழு வரும் பகுதிகளில் உள்ள கட்சி அணியினரும் இதில் கலந்துகொள்வர். பிரசாரக்குழுக்கள் வரும் பகுதிகளில் உள்ள பொதுக்களிடம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் ஏப்படும் தீமைகள் குறித்து பிரசாரம் மேற்கொள்ளப்படும். இதில், கலைக்குழுக்களும் பங்கேற்கும். இரண்டு குழுக்களும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு ஜூன் 10ம்தேதி அன்று ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக  போராட்டம் நடைபெற்ற நெடுவாசலில் மண்ணில் நிறைவடையும். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறும்.இதில் மாநில தலைவர்கள் பங்கேற்று உரைநிகழ்த்துவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Communist Party ,Pudukottai ,
× RELATED வாக்குச்சாவடியில் தாமரை வடிவ அலங்காரம்