மஞ்சூர், மே 21: கரியமலை கருமாரியம்மன் கோயில் 30ம் ஆண்டு திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே கரியமலை உள்ளது. இப்பகுதியில் கருமாரியம்மன் கோயில் உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளில் பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் 30ம் ஆண்டு திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி பல்வேறு பூஜைகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு கரியமலை காளியம்மன் கங்கையில் கரகம் பாலிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று சக்தி கரகம் மற்றும் அம்மன் திருவீதி உலா நடந்தது. மேள, தாளங்களுடன் ஊர்வலம் கரியமலையில் துவங்கி பள்ளிமனை, மஞ்சூர் பஜார் வழியாக மாரியம்மன் கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பெண்கள் மாவிளக்குகளுடன் பங்கேற்றனர். தொடர்ந்து அன்னதானம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதை தொடர்ந்து இன்று மஞ்சள் நீராடுதல் மற்றும் கரகம் குடிவிடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டியினர் செய்திருந்தனர்.