×

மது அருந்தி விட்டு வாகனங்கள் ஓட்டுவதால் சாலை விபத்து அதிகரிப்பு

சிவகங்கை, மே 21:  சிவகங்கை மாவட்டத்தில் சாலை விபத்து மரணங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள், மாவட்ட நெடுஞ்சாலைகள், மற்றும் 445 ஊராட்சிகளில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமச்சாலைகள் உள்ளன. இங்கு நான்கு சக்கரம் மற்றும் கனரக வாகன விபத்துகளை விட டூவீலர் வாகன விபத்துகள் அதிகம் நடந்து வருகின்றன. தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள அபாயகரமான வளைவுகள், குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்டவைகளால் விபத்துகள் அதிகரித்துள்ளன.

2015ம் ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் 952 சாலை விபத்துகள் நடந்தன. இந்த விபத்துகளில் 261 பேர் மரணமடைந்தனர். 2016ம் ஆண்டு மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 322 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் ஆயிரத்து 604 பேர் காயமடைந்துள்ளனர். 333 பேர் மரணமடைந்துள்ளனர். 2017ம் ஆண்டு மொத்தம் ஆயிரத்து 112 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 295 பேர் மரணமடைந்துள்ளனர். 2018ம் ஆண்டில் 853 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 244பேர் மரணமடைந்துள்ளனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளில் விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை சராசரியாக 300 உள்ளது. இதில் டூவீலர் விபத்துகளில் இறந்தவர்களே அதிகம். டூவீலர் மீது கார், வேன், கனரக வாகனங்கள் உள்ளிட்டவைகள் மோதியது மற்றும் கட்டுப்பாட்டை இழந்து மரம், தடுப்புச்சுவரில் மோதியது உள்ளிட்ட சம்பவங்களால் இந்த விபத்துகள் நடந்துள்ளன. கனரக வாகனங்களான பஸ், லாரி உள்ளிட்டவைகள் அதிவேகத்தால் விபத்தில் சிக்கி ஏராளமானோர் காயமடையும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. சாலைகளில் நடந்து சென்றவர்கள், டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றவர்களும் விபத்தில் மரணமடைந்துள்ளனர். மதுரை, ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் திருப்புவனம், மானாமதுரை பகுதிகள், மதுரை, தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சிவகங்கை, காளையார்கோவில் பகுதிகள், மதுரை, காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் திருப்பத்தூர், காரைக்குடி பகுதிகளில் விபத்துகள் அதிகம் நடந்துள்ளன.

டூவீலர் விபத்தில் சிக்கி மரணமடைந்தவர்களில் 90 சதவீதம் பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்கள் தவிர எஞ்சியவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நிரந்தர ஊனம் அடைந்துள்ளனர். போலீசார் தெரிவித்ததாவது, வாகனங்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதனால் விபத்தின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. சாலை பாதுகாப்பு, விழிப்புணர்வு குறித்து எவ்வளவு வலியுறுத்தினாலும் வாகன ஓட்டிகள் கண்டுகொள்வதில்லை. சாலை விதிகளின்படி நடந்து விபத்தில் சிக்கியவர்கள் மிகக்குறைவேயாகும். டூவீலர் விபத்துகளில் மரணம் அடைந்தவர்களில் 95 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்தில் சிக்கியவர்களாவர். பல்வேறு விபத்துகளில் இன்சூரன்ஸ் கிடைப்பதற்காக குடும்ப நலன் கருதி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக எப்ஐஆர் பதிவு செய்வதில்லை. ஆனால் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதில் தான் அதிகமான விபத்துகளும், இறப்புகளும் நடந்துள்ளன. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தற்போது அதிகரித்துள்ளது என்றனர்.

Tags : Road traffic accidents ,
× RELATED போக்குவரத்து விதிமீறல் குற்றங்களை...