திருப்பூர், ஏப். 24: திருப்பூர் 15 வேலம்பாளையத்தில் உள்ள அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் அந்த பள்ளியை சேர்ந்த 129 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றதன் மூலமாக 100 சதவீத தேர்ச்சி என்ற சாதனையை முதல் முறையாக அந்த பள்ளி பெற்றுள்ளது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 15 வேலம்பாளையம் அறிவு திருக்கோயில் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அறிவு திருக்கோயில் தலைவர் சுப்ரீம் செல்வராஜ், செயலாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் கூறியதாவது: அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலை பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறுவது இதுவே முதல் முறையாகும். 15 வேலம்பாளையம் அறிவு திருக்கோயில் சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி படிக்கும் வகையில் சிறப்பு யோகா பயிற்சி வழங்கி வருகிறோம்.
இதன் பயனாக பள்ளி வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள், அவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்கள், தலைமையாசிரியை மற்றும் பெற்றோருக்கு 15 வேலம்பாளையம் அறிவு திருக்கோயில் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம். ஜூன் மாதம் பள்ளி திறந்த உடன் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.