வேலூர், ஏப்.24: ஆம்பூர் தாலுகா, கரும்பூர் அடுத்த அங்கியாப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி (39) என்பவர் நேற்று, வேலூர் எஸ்பி அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:நான் ஆம்பூர் தாலுகா, கரும்பூர் அடுத்த அங்கியாப்பள்ளி கிராமத்தில் வசித்து வருகிறேன். பிஏ வரை படித்துள்ளேன். என்னிடம் சாத்தம்பாக்கம் ஊராட்சி பாவர்தன்பட்டடை கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர், கடந்த 2016ம் ஆண்டு, தான் வட்ட வழங்கல் அலுவலகத்தில் வேலை செய்து வருவதாகவும், தாலுகா அலுவலகத்தில் கிளார்க் பணி வாங்கி தருவதாக கூறி என்னிடம் ₹12.50 லட்சம் பெற்றார்.
அவர் வேலை வாங்கி தராததால், 2016ம் ஆண்டு ஜூலை மாதம் 22ம் தேதி ராஜ்குமாரின் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டேன். அதற்கு ராஜ்குமார், அவரது உறவினர் தரணிகுமார் ஆகியோர் பணம் தர முடியாது என மிரட்டினர்.இதையடுத்து வக்கீல் ரமேஷ்பாபு என்பவர் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில் பணத்தை 3 மாதங்களுக்கு திருப்பித் தருவதாக ராஜ்குமார் தெரிவித்தார். ஆனால் இதுநாள் வரை பணத்தை திருப்பித் தரவில்லை. எனவே ராஜ்குமாரிடம் இருந்து பணத்தை பெற்று தர வேண்டும். மேலும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.