திருத்துறைப்பூண்டி, ஏப்.23: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்ட தலைவர் முஹம்மது மிஸ்கீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இலங்கை தலைநகர் கொழும்புவில் அந்தோணியார் தேவாலயம் உள்ளிட்ட 7 இடங்களில் ஈஸ்டர் பண்டிகை நாளில் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது.இந்த குண்டு வெடிப்பில் 200க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தீவிரவாதம் என்பது அதை யார் செய்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். அப்பாவி மக்களை அநியாயமாக கொலை செய்யும் தீவிரவாதச் செயலை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து கடுமையான தண்டனையை வழங்க வேண்டும்.
நிராயுதபாணியாக இருக்கும் அப்பாவி மக்களின் மீது பண்டிகை தினத்தின்போது அவர்களின் மகிழ்ச்சியை கெடுக்கும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. இலங்கையில் குண்டு வெடிப்புகள் ஓய்ந்து போன நிலையில் மீண்டும் பயங்கரவாதம் தலை தூக்குகின்றதோ என்று நினைக்கும் வகையில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும். இந்த குண்டு வெடிப்பிற்கு காரணமான பயங்காரவாதிகளின் மீது இலங்கை அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த பயங்கரவாத வன்முறை சம்பவத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.