நாகை, மார்ச் 22: நவம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை என மீன்பிடி தடைகாலத்தை மாற்றி அமைக்க வேண்டும் என விசைப்படகு மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர். நாகையில் அனைத்து மாவட்ட ஆழ்கடல் மீன்பிட விசைப்படகு மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் கூட்டம் நாகையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் மதியழகன் தலைமைத் வகித்தார். மாநில துணை ஒருங்கிணைப்பாளர் சென்னை வரதன், துத்துக்குடி பன்னீர்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ் வரவேற்றார். கூட்டத்தில் அக்கரைப்பேட்டையை சேர்ந்த மனோகரன், மாநில துணை ஒருங்கிணைப்பாளர்கள் சென்னை முத்துகுமரன், அனைத்து மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு ஏப்பரல் 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை 45 நாட்களை மீன் உற்பத்திக்காலமாக அறிவித்து கடந்த 2000மாவது ஆண்டு முதல் மீன்வர்கள் ஆழ கடல் மீன் பிடிக்க தடை விதித்தது. அதனை நடைமுறைப்படுத்தி வந்தது. தற்போது அது 60 நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை புயல், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் மிகுந்த நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதங்களுக்கு மாற்றி அறிவிக்க வேண்டும். ஆழ் கடலில் 50 நாட்கள் வரை தங்கி மீன் பிடி தொழில் செய்து ஆண்டிற்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் வரை அந்நிய செலவாணி ஈட்டித் தரும் ஆழ்கடல் மீன் பிடி விசைப்படகு மீனவர்களுக்கு மீன்பிடி தொழிலுக்கு தேவையான டீசல் மான்ய விலையில் வழங்க வேண்டும். மத்திய அரசு நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் ஆழ்கடல் மீன்பிடி தொழிலை மேம்படுத்தும் நோக்கில் அறிவித்த 50 சதவீத மான்யம் மற்றும் 70 சதவீத மான்யத்துடன் விசைப்படகுகள் கட்டும் திட்டத்தினை விரைவுப்படுத்தி உதவிட வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.