கரூர், மார்ச் 20:பாராளுமன்ற பொதுத்தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், வாக்குப்பதிவு மையங்களில் செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் அரவக்குறிச்சி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி தலைமை வகித்து தெரிவித்துள்ளதாவது: அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகள் 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 250 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் பயிற்சி பெறும் மண்டல அலுவலர்கள் உங்கள் பகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றக்கூடிய அலுவலர்களுக்கு இந்த பயிற்சியை வழங்க வேண்டும். இந்த பயிற்சி வகுப்பில் சொல்லப்படுகிற அனைத்து தகவல்களையும் நீங்கள் முழுமையாக புரிந்து
கொள்ள வேண்டும்.
வாக்குப்பதிவு நாளன்று, வாக்குச்சாவடி மையத்தில் உள்ள முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு முதலில் நடத்திக் காட்ட வேண்டும். இந்த மக்களவை பொதுத்தேர்வில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முதன் முறையாக விவிபேட் எனப்படும் வாக்காளர் யாருக்கு வாக்களித்தார் என்பதை அவருக்கு மட்டுமே காட்டும் இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. எனவே, இந்த கருவியினை கையாளும் முறை குறித்தும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் தாசில்தார் ஈஸ்வரன் உட்பட அனைத்து அலுவலர்களும் கலந்து கொண்டனர்.