ஊட்டி, மார்ச் 19: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள சைக்ளோமின் மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். எனினும், கோடை விடுமுறையின் ேபாது, அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில், கோடை சீசன் துவங்க ஓரிரு நாட்களே உள்ள நிலையில் தற்போது பூங்கா தயார் செய்யும் பணியில் தோட்டக்கலை துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாவரவியல் பூங்கா முழுவதிலும், 5 லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணி நடந்து வருகிறது. நடவு பணிகள் இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், அடுத்த மாதம் 2வது வாரத்திற்கு மேல் அனைத்து செடிகளிலும் மலர்கள் பூத்து குலுங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பூங்கா முழுவதிலும் சிறிய நாற்றுக்கள் மட்டுமே உள்ளன. இவைகள் பனி மற்றும் வெயிலில் பாதிக்காமல் இருக்க பாதுகாக்கப்பட்டு வருகிறது. நாள் தோறும் தண்ணீர் பாய்ச்சும் பணிகள் மற்றும் உரமிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடையாமல் இருக்க கண்ணாடி மாளிகையில் தற்போது தொட்டிகளில் பல்வேறு வகையான மலர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில், பல வண்ணங்களில் வைக்கப்பட்டுள்ள சைக்ளோமின் மலர்களும் அடங்கும். இந்த மலர்கள் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
.